Sunday 1 February 2015

மாதொருபாகன் - புதினம் ஒரு பார்வை


நூல் தலைப்பு   : மாதொருபாகன்
ஆசிரியர்           : பெருமாள் முருகன்
முதற்பதிப்பு     : டிசம்பர் - 2010
வெளியீடு         : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்          : 190
விலை                : ரூ - 140/-  

     
பொதுவாகவே நான் புதினங்கள் படிக்கும் பழக்கமில்லாதவன். ஆனால் ஒருபுறம் இந்துத்துவ அமைப்புகள் இந்தப் புத்தகத்தை எறிப்பதும் மறுபுறம் சாதிய அமைப்புகள் எழுத்தாளரை எதிர்ப்பதும் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதும் என்னை இந்தப்புத்தகத்தைப் படிக்கத்தூண்டியது. இடையில் இந்தப் புதினத்தின் (நாவல்) ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் அவருடைய அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பெருமாள் முருகன் இறந்துவிட்டதாகவும் இனி அவர் எதுவும் எழுதப்போவதில்லை எனவும் சாதாரண ஆசிரியராகவே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒருசேரப் பார்க்கும் போது உண்மையில் அவர் அப்படி எதைத்தான் எழுதியுள்ளாரென்பதைத் தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றது. அந்தக்கதை பற்றியும் அதன் மூலம் எனது கருத்து என்னவென்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.

மாதொருபாகன் புத்தகமும், ஆசிரியர் பெருமாள் முருகனும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ONE PART WOMAN

முதலில் இந்தப் புத்தகத்தின் பெயர்க்காரணம் என்னவென்பதைச் சொல்லிவிடுகிறேன். மாதொருபாகன். மாது+ஒரு+பாகன். ஒரு பாதி மாதுவைக் கொண்ட பாகன். ஆம். அர்த்தநாரீசுவரரின் இன்னொரு பெயர்தானிது. அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருள் தரக்கூடியது. இந்த மாதொருபாகன் கோயில் இருப்பது திருச்செங்கோடு. அதையே கதைக்களமாகக் கொண்டு கதை நகர்கிறது. இப்போது புரியும் ஏன் இந்து அமைப்புகள் இந்தக் கதையை எதிர்க்கின்றனரென. 

முதலில் இந்தப் புத்தகத்தையும் ஆசிரியரையும் எதிர்க்கும் ஆட்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். எவருக்கும் எந்தக் கருத்தையும் சொல்லும் உரிமையுண்டு. இது இந்தியத் துணைக்கண்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஒரு கருத்தை நாம் வைக்கும் போது அதற்கு எதிர்க்கருத்துக்கள் கண்டிப்பாக வரும். அதை எதிர் கருத்தாகத்தான் வைக்கவேண்டுமே தவிர இந்தக்கருத்தை நீ சொல்லவே கூடாது என்று சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. உதாரணத்திற்கு இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இராமனை கடவுளாகவும் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் இராவணனை அரக்கன் போலும் காட்டுகின்ற இலக்கியம். வடநாட்டவருடையது. இதற்கு எதிர் கருத்தாகப் புலவர் குழந்தையவர்கள் “இராவணகாவியம்” என்றதொரு இலக்கியத்தைப் படைத்து அதில் இராவணனை காவியத்தலைவனாக வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதே அது திறமை. அது சரி. அந்தப் புத்தகம் 1940களில் எழுதப்பட்டாலும் 1976வரை தடை தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது வேறுகதை. அப்போது கூட இவர்களுக்கு எதிராக நாமெழுதிய புத்தகத்தை வெளியில் விட்டால் எங்கு இராமாயணத்தை மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற பயம்தான் அவர்களை இந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வைத்தது. இது முற்றிலும் கோழைத்தனம். இப்படி இருக்கையில் நாம் அப்படி என்னதான் பெருமாள் முருகன் மாதொருபாகனில் சொல்லிவிட்டார் என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.

திருச்செங்கோடு இருப்பது கொங்குநாட்டில். ஆக அங்கு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். ஆக இந்தக் கதையின் முதன்மைக் கதாப்பாத்திரங்களும் அவர்களே.

சுருக்கமான கதையைச் சொல்லி விடுகிறேன். காளி, பொன்னா. இருவரும் கணவன் மனைவிமார்கள். கதையின் ஆதிமுதல் இறுதிவரை இவர்கள் கூடவே வருவது பொன்னாவின் வீட்டில் இருக்கும் பூவரசமரம். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லை. ஏறாத கோயிலில்லை வேண்டாத தெய்வமில்லை செய்யாத சடங்கில்லை. இதையெல்லாம் செய்தால் மட்டும் குழந்தைப்பேறு வந்துவிடுமா என்ன? இல்லைதான் ஆனால் கதையின் காலம் சுதந்திரத்திற்கும் முன் வெள்ளைக்காரன் இருந்தபோது. இப்போதும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இருந்தாலும் அன்று அவை கொஞ்சம் அதிகமாகவே இருந்துவந்தன. முக்கால்வாசி புத்தகம் முழுமையும் இந்தக் கதாப்பாத்திரங்கள் பத்தியும் காளியின் தோழனும் பொன்னாவின் அண்ணன் முத்துவைப்பற்றியும் அவனது புத்திசாலித்தனமான நிகழ்வுகளைப்பற்றியும், காளியின் கல்யாணமே ஆகாத சித்தப்பாவைப்பற்றியும், எல்லாவற்றிற்கும் மேல் இவர்களைப்பழிக்கும் ஊர்மக்கள் பற்றியும் அவர்களது துன்பத்தைப்பற்றியும் துல்லியமானதொரு காட்சிப்படுத்தலை ஆசிரியர் தந்திருக்கின்றார். "மலடி" மற்றும் "வறடன்" என்ற சொற்களுக்குக் காளியும் பொன்னாவும் படும்பாடு சொல்லிமாளாது.

இந்தப்புத்தகத்தின் முக்கியமான நிகழ்வைச்சொல்லியாக வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் ஆசிரியர் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இந்தக்கதை விருவிருப்படைவதே கடைசியில்தான். ஏனென்றால் திருச்செங்கோட்டு கோயில் திருவிழா தொடர்ந்து பதிநான்குநாட்கள் நடக்கும். அதன் முதல்நாள் சாமி கீழிறங்கிவருமாம். பதினான்காம்நாள்தான் சாமி மலையேருமாம். அன்று மட்டும் அந்தத் திருவிழாக்கூட்டத்திற்கு வரும் ஆண்களனைவரும் சாமியாக வலம்வருவார்கள். அன்று இரவு மட்டும் திருமணம் ஆன ஆனால் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் மட்டுமே அந்தக்கூட்டத்தில் அதிகம் தென்படுவர். அந்தப் பெண்கள் எந்தச் சாமியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவரோடு உறவு வைத்துக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பிறக்கும் குழந்தை சாமி கொடுத்த குழந்தையென்றே சொல்வது அந்த ஊரில் வழக்கம். அப்படிப் பிள்ளை பெற்றவர்கள் ஏற்கனவே அந்த ஊரில் இருக்கின்றனர். இஃது ஒரு வழிபாடாக வழக்காக அந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவொன்று.

இப்படி இருக்கையில் பொன்னாவின் அம்மாவோ எத்தனையோ சடங்குகளும் வழிபாடுகளும் செய்தும், பொன்னா மாதமாதம் சரியான நாள் தவறாமல் மாதவிடாய் ஆகும்போது அவர்கள் படும் துன்பங்கண்டு தனது மகளையே அந்தப் பதினான்காம் நாள் சாமி மலையேறும் நாளன்றே திருவிழாவிற்குப் போய்வரச்சொன்னாள். அவனது அண்ணன் ,முத்துவும் தங்கை நலமோடு இருக்கவேண்டுமென்றும், தனது இளமைப்பருவ நண்பன் காளியும் தான் முடங்கிக்கிடக்கும் தொண்டுப்பட்டியை விட்டு வெளிவர வேண்டுமென சரியென்றான். பொன்னாவும் ஒரு மாற்றம் அந்தக் குடும்பத்தில் நடக்கவேண்டுமென்பதற்காகவும் அதுவும் காளி சரியென்றால் மட்டுமே பதினான்காம்நாள் திருவிழாவிற்குச் செல்வதாகவே முடிவெடுத்தாள். இதற்கு காளி ஒத்துக்கொண்டானா, என்ன காரணம் சொன்னாள் பொன்னா?, காளியைச் சம்மதிக்க வைத்தாளா?, பொன்னா பதினான்காம்நாள் திருவிழாவிற்குப் போனாளா? குழந்தை பிறந்ததா?, எல்லாவற்றிலுமிருந்து மீண்டு வந்தார்களா? என்பதுதான் கதை.

உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆம். முதன்முதலில் இதைக்கேட்பவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நாம் சின்ன சின்ன கருத்துக்களை உற்று நோக்கவேண்டும். இந்த முக்கியமான கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதில் தான் நமது அறிவு இருக்கின்றது. மேற்சொன்ன ஒற்றைக்காரணத்திற்காகவே அவர் அந்த கடவுளரையும் அந்தக் கோயிலையும் தவறாகக் கூறுவதாக இந்து அமைப்புகளும், இந்த சாதிப்பெண்களை தவறாக இந்தக் கதையில் சித்தரிப்பதாக சாதிய அமைப்புகளும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன. அவருக்கு எதுவும் சொல்ல எழுத உரிமை என்பதையும் தாண்டி நாம் ஒருசிலவற்றைப் பார்க்கவேண்டுகின்றேன். அவை

  • எந்தவொரு மனைவியும் தான் மணந்த கணவனைவிட்டு வேறொருவனோடு உறவு வைத்துக் கொள்ள விரும்பமாட்டாள். அதே போலத்தான் காளியின் நிலையிலிருக்கும் மற்ற ஆண்களும் தன் மனைவி எக்காரணத்திலும் இப்படியொரு நிலைமைக்கு இட்டுச்செல்வதை விரும்ப மாட்டான். கதையிலும் காளியின் நிலைமையும் அதுவே. சரி அதே காளியும் பொன்னாவும் 2015இல் இருக்கிறார்களென வைத்துக்கொள்ளலாம். அவர்கள் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். என்ன செய்வார்கள்? அறிவியல் வளர்ந்துவிட்டது. முதலில் யாருக்கு இந்தக்குறை என்பதைக் கண்டறிய வேண்டும். 
  • ஆணுக்குத்தான் குறையென்றால் அடுத்து என்ன செய்வார்கள்? அவரது விந்தணுக்கள் தனியாகச் சேமித்து மனைவியின் அண்டக்கருக்களை தனியாக பக்குவப்படுத்தி வெளியே கருவை செயற்கையாக உருவாக்கவைத்து பிறகு பெண்ணின் கருப்பையில் விட்டு அது குழந்தையாக கருவுருவாக்கம் செய்வார்கள். 
  • அதிலும் ஆணின் விந்தணு வீரியமற்றதாக இருக்கும் தருணத்தில் வெளிச்சந்தையிலிருந்து விந்தணுக்களை வாங்கிக் கொள்ளலாம். திருமணம் செய்யாமலே ஒரு ஆணுடன் உறவு வைக்காமலே ஒரு பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இரத்த தானம் செய்வது போல விந்தணுக்களையும் தானம் செய்யும் முறையுள்ளது. அதிலிருந்து தகுந்த விந்தணுவை பெண் தேர்வுசெய்தும் கொள்ளமுடியும். 
  • ஆனால் சில பெண்களுக்கு கருப்பையில் குழந்தை வளருவதற்கான எந்தவொரு சாதகமான சூழல் இல்லாதிருக்கும் தருவாயில் கணவனின் விந்தணுவை எடுத்து மனைவியின் அண்டக்கருவை எடுத்து தனியாக வேறொரு பெண்ணின் கருப்பையில் வளரவைத்து அவரையே பிள்ளையையும் ஈன்றெடுக்கச்சொல்லி, குழந்தையை பிறகு அவரது பெற்றோரிடம் கொடுத்துவிடவேண்டும். இதற்கு வாடகைத்தாய் முறையென்று பெயர். இதில் அந்த கணவன் மனைவிக்கும் அந்த வாடகைத்தாயிற்கும் எந்த தொடர்பும் இல்லாதபடி இடையில் இடைத்தரகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இத்தொழிலில் முதலிடம் வகிப்பதே நமது பிரதமர் மோடியின் குசராத் மாநிலம்தான். இந்தியாவிலுள்ள வாடகைத்தாய்களுக்குத்தான் குறைந்த பணம் கொடுத்தால் போதுமே.
மேற்சொன்ன எந்த முறைகளிலும் இந்தக் காலத்தில் குழந்தைபெற்றுக் கொள்ள முடியும். அறிவியல் விந்தணுக்களையும் அண்டக்கருக்களையும் கையாளும் விதத்தையும் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கொடுத்துள்ளது. முக்கியமாக மேற்சொன்ன அனைத்தும் பணத்தை மட்டுமே மிக அடிப்படையாகக் கொண்டவை. செலவு அதிகரிக்க அதிகரிக்க அதன் தொழில்நுட்பமும் அதைச்சார்ந்த வழிமுறைகளுமுண்டு. இங்கு எந்தவொரு சாதியோ மதமோ இனமோ கணக்கில் இல்லை. ஒரு தாழந்த சாதிப் பெண்ணால் உயர் சாதி தம்பதிகளுக்கு அல்லது வேற்றுமத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத்தற முடியும். இதில்தான் மனிதகுலத்தின் வளர்ச்சியிருக்கிறது. இப்படி சாதிகளும் மதங்களும் இங்கு பார்க்கப்படுமானால் எவருக்கும் குழந்தைபிறப்பு இல்லையென்றால் இன்னும் 50ஆண்டுகளில் உலகத்தில் மனித இனமே அழிந்துபோகும்.

ஆனால் கதையில் வரும் காலகட்டம் கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர், சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால். அன்று அறிவியல் இந்தளவு வளரவில்லை. ஆக அன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ஒரே முறைதான் உண்டு. அது ஆணும்  பெண்ணும் உறவு வைத்துக்கொள்வதேயன்றி வேறேதுமில்லை. அதைத்தான் இந்தக்கதையும் சொல்கிறது, இதில் தவறேதுமில்லை. இதில் சாதிமதம் பார்க்கும் எத்துனை சாதியமத அமைப்புகள் இன்றைய அதே கொங்குநாட்டில் நவீன அறிவியல் மூலம் நடக்கும் இந்த மகப்பேறு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன?? இவர்கள் அவ்வளவு நேர்மையாக இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஏன் இந்த அறிவியல் முறையில் நடக்கும் முறைகளெதுவும் சாதிச்சான்றிதழ் கொடுத்து நடத்தப்படுவதில்லையென பதில் கூற முடியுமா?? இந்தக்கட்டுரையை படிப்பவர்களனைவரும் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம். யாருமே மனித இனம் அழிந்துபோவதை விரும்ப மாட்டார்கள். அதையே கருத்தில் கொண்ட அந்நாள் முன்னோர்கள் இப்படியொரு வழக்கை வைத்திருப்பார்களென்றே நான் நினைக்கின்றேன். அதை வெகுவாக மக்களிடம் கொண்டுசெல்ல அந்த நடைமுறையைப் பழிக்காமலிருக்க அவர்களுக்கு தேவைப்பட்டததுதான் கடவுளும் கோயிலும். அவ்வளவே. ஆணும் பெண்ணும் சமமாக இருப்பதே மனித சமன்பாடு. ஆண் மட்டும் அல்லது பெண்மட்டும் மனித குலத்தைக் காப்பாற்றவோ அல்லது தழைத்து வாழவைக்கவோ முடியாது. ஆணும் தேவை பெண்ணும் தேவை. அதனால்தான் ஆண் பாதி பெண்பாதி என்ற ஒரு வரைபடம் மாதொருபாகனாக கடவுளாக மாற்றப்பட்ட கருத்து, அந்த கடவுள் மீது எனக்கு நம்பிக்கையில்லை ஆனால் அந்தக் கருத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடையவன் நான். இதை இந்து அமைப்புத் தோழர்களும், சாதியக்கட்சித் தோழர்களும் புரிந்துகொண்டு, இப்படியொரு ஒப்பற்ற கருத்தை வலிமையான கருத்தை மக்கள் முன் கற்பனைப் புதினமாக முன்வைத்த ஆசிரியர் பெருமாள் முருகனை வாழ்த்துமாறு கேட்டுகொள்கின்றேன்.
புத்தகத்தோடு நான்

பெருமாள் முருகன் அவர்களின் புத்தகத்தை இலவசமாக் தரவிறக்கம் செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

உங்களின் மேன்மையான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உங்களின் கருத்துக்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை எனக்கு படிக்கக் கொடுத்து உதவிய அண்ணன் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி. 

- குட்டிமணி செங்குட்டுவன்

தரவுகள்
http://www.newindianexpress.com/states/tamil_nadu/Tamil-Novel-Madhorubhagan-Controversy/2015/01/16/article2621707.ece
http://www.goodreads.com/book/show/13419485-madhorubhagan